Tuesday 30 July 2013

குற்றாலம் சாரல் விழா: காய்கறி, பழக்கண்காட்சி எக்ஸ்குளூசிவ் படங்கள்!

சிறுவயதில் மட்டுமல்ல இப்போதும் கூட குற்றாலம் செல்வதென்றாலே சந்தோஷம் தானாக தொற்றிக் கொள்ளும். அதுவும் சில்லென்ற தண்ணீரில் நனைந்து ஆட்டம் போடும்போது இருக்கும் சந்தோஷம் இருக்கிறதே.... அதை வார்த்தைகளால் அளவிட முடியாது. மும்பெல்லாம் குற்றாலத்திற்கு போனால் அருவியில் குளிப்பது, குரங்குகளின் சேட்டைகளை ரசிப்பது, பார்க்கில் விளையாடுவது என்று ஒருசில என்ஜாய்மெண்ட்களே இருக்கும்.

ஆனால் இப்போது மக்களை மகிழ்விக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் காய்கறி மற்றும் பழக்கண்காட்சி. குற்றாலம் சாரல் திருவிழாவில் முதன்முறையாக காய்கறி மற்றும் பழக்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் முதன்முறையாக நடத்தப்பட்ட இக்கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

பார்ப்போரை சுண்டி இழுக்கும் வகையில் கண்காட்சியில் காய்கறி மற்றும் பழங்களால் பல்வேறு உருவங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. கேரட், வெள்ளரி, கத்தரிக்காய், வெண்டைகாய், பூசணி என பல்வேறு காய்கறிகளை பயன்படுத்தி மயில், கோழி, சேவல், டைனோசர் என தத்ரூபமாக காட்சிதரும் உருவங்கள் அரங்கத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.  குறிப்பாக மாம்பழ டைனோசர் அனைவரையும் கவருகிறது. ஊதா நிற கத்தரிக்காய்களை பயன்படுத்தி செய்யப்பட்ட கரடி, மற்றும் அண்ணாச்சி பழங்களால் உருவாக்கப்பட்ட முதலை, சுரைக்காயில் உருவாக்கப்பட்ட மீன், பீட்ருட், கேரட்டால் உருவான ஒட்டகச்சிவிங்கி மற்றும் மலைப்பாம்பு, கத்தரிக்காயை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பென்குயின், பச்சை மிளகாயில் செய்யப்பட்ட கோழி, இது தவிர குரங்கு, மலைப்பாம்பு, மயில், முதலை, ஆமை, டயனோசரஸ், வாத்து, சேவல், கோழி, கிளிகள், கொக்கு, மலர்ச்செடிகள் போன்ற உருவங்களை காய்கறி மற்றும் பழங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

இதேபோல மலர் கண்காட்சியும் கண்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டுத் தோட்டத்தில் பூத்துக் குலுங்கம் மலர்களை பார்க்கும்போதே பலருக்கும் மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி கிடைக்கும். இங்கு எண்ணிலடங்கா மலர்களை வைத்துள்ளார்கள். ஒவ்வொரு பூக்களையும் கடந்துபோகும்போது மகிழ்ச்சி ஒருபுறமிருப்பினும், அந்த மலர்களை விட்டு விலகப்போகும் வருத்தமும் நெஞ்சத்தில் குடி கொள்கிறது.

இந்த கண்காட்சி நாளை வியாழக்கிழமையும் நடைபெற உள்ளது. நேரில் பார்த்து ரசிக்க விரும்புவோர் குற்றாலத்திற்கு புறப்படுங்கள். நேரில் பார்க்க முடியவில்லையே என்று கவலைப்படுபவர்கள்... கவலையை விட்டு விட்டு இங்கே நான் பதிவு செய்திருக்கும் படங்களை சுட்டி, ரசித்து பார்த்து மகிழுங்கள்.












1 comment: