Monday 24 June 2013

எம்ஜிஆரை வளர்த்து விட்ட கருணாநிதி! கவியரசர் கண்ணதாசன் நினைவுகளிலிருந்து....!!

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.

“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.

செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.

நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.

“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்

மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.

“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.

“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.

“இருக்காதே” என்றேன்.

“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.

இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.

அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.

“என்ன நினைக்கிறாய்?” என்றார்.

“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.

“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.

ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

1971 பொதுத் தேர்தலே சான்று.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.

ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்‌ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.

இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.

சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.

அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.

ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.

கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.

அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.

எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”

- என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்

ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.

இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.

by ஜெகதீஸ்வரன்

ஆதாரம் -கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)

நன்றி: கண்ணதாசன் வலைப்பக்கம்

Tuesday 18 June 2013

காவல்துறை அலட்சியத்தால் பள்ளி குழந்தைகள் 9 பேர் பலி!

போக்குவரத்து காவல்துறையின் அலட்சியத்தால் இன்று (19.07.2013) 9.30 மணிக்கு புதுக்கோட்டையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஷேர் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மீதிகுழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேராசை பிடித்த பல ஆட்டோக்காரர்கள், ஆம்னிகாரர்கள் வருமானத்திற்காக அளவுக்கு அதிகமான மாணவர்களை ஏற்றிச்செல்கிறார்கள். விதிகளை மீறி அதிக மாணவர்களை ஏற்றிச்செல்லும் இவர்களை கண்காணிக்க வேண்டிய காவல்துறையோ விபத்து நேரும்போது தான் சும்மா ஒரு மாசத்துக்கு ஒழுங்கா கண்காணிக்கறார்கள். அரசும் விபத்து சமயத்தில் மட்டுமே கடுமையான விதிகளை பிறப்பிக்குது.பேருந்து ஓட்டுனர்களுக்கு கூட காலை நேரமாச்சே பள்ளி மாணவர்களின் வாகனங்கள் செல்லுமே நிதானமா பஸ்சை இயக்கனும்ங்கற அறிவு இருக்க மாட்டேங்குது..

போக்குவரத்து அதிகாரிகள் சரியாக கண்காணித்து விதிகளை கடுமைப்படுத்தி பள்ளி வாகனங்களையும், தனியார் பள்ளி வாகவங்களையும் ஒழுங்குப்படுத்தினால் இதுபோன்ற விபத்துக்களை தடுக்கலாமே! செய்வார்களா?

Sunday 16 June 2013

யாரு முட்டாள்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்!

ரெண்டு பிசினெஸ்மேன் பேசிட்டிருந்தாங்க.
ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் னு.
மறுத்த அடுத்தவர், ‘சான்ஸே இல்ல, என் ஆளைப் பத்தி தெரியாம சொல்றீங்க ன்னாரு.
சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவ கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.
‘சரிங்க அய்யா ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.
‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.
‘அர்ஜென்ட்டான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா ன்னாரு.
‘உடனே பாத்துட்டு வர்றேன் னு அவனும் கிளம்பிட,
‘பாத்திங்களா, என் ஆள ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் சூப்பர் னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல ன்னான்.
‘எப்படி சொல்றே ன்னான் அடுத்தவன்.
‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல ன்னான்.

Wednesday 12 June 2013

ஆனந்தம் + ஆரோக்கியம் தரும் குற்றாலம் அருவி குளியல்

குற்றாலம் என்றால் அருவி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதற்கும் மேலே நிறைய விஷயங்கள் அங்கு இருக்கின்றன என்பதை எல்லோரும் அறிவதற்காகவே இந்த கட்டுரை.

குன்று + ஆலம் என்பதே குற்றாலம் ஆகும். குன்று என்றால் மலை. ஆலம் என்றால் குளிர்ந்த நீர். அதாவது குன்றில் இருந்து குளிர்ந்த நீர் கொட்டுவதால் இந்த அருவி குற்றாலம் என்று பெயர் பெற்றுள்ளது. இதனாலேயே திருஞானசம்பந்தர் தனது பாடலில் குற்றாலம் அருவியை குன்றத்து அருவி என்று பாடினார். பொதிகை மலை அடிவாரத்தில் மெல்லிய தென்றலுடன், பூஞ்சாரல் தூறும் குற்றாலத்தில் குளிப்பது ஆனந்தத்தை மட்டுமல்ல, உடலுக்கு ஆரோக்கியத்தையும் அள்ளித்தருகிறது. இதனாலேயே குற்றாலத்தில் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். குற்றாலத்தில் ஒன்பது அருவிகள் உள்ளன. அவற்றில் நீராடுவது சொர்க்கத்தில் மிதப்பது போன்ற உணர்வை தரும் என்றால் அது மிகையாகாது.

இத்தகைய சிறப்பு மிக்க குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜீன் மாதம் சீசன் துவங்கி ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும். சில ஆண்டுகளில் சீசன் துவங்க காலதாமதமாகி விடும். ஆனால் இந்தாண்டு சரியான நேரத்தில் அதாவது ஜீன் 1ந்தேதியே சீசன் அதிரடியாக துவங்கியது. தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இடையில் ஒரு நாள் பலத்த வெள்ளம் காரணமாக மெயினருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. சீசன் படுஜோராக உள்ள நிலையில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுத்து வருகின்றனர். போதாக்குறைக்கு பள்ளிகள் திறப்பு 15ந்தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்து, அனைத்து அருவிகளிலும் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இனி ஒவ்வொரு அருவிகளை பற்றி காண்போம்.
தேனருவி

திரிகூட மலையில் இருந்து உருவாகும் சித்ரா நதி மலையின் மேல் முதன்முதலில் 100 அடி உயரத்தில் இருந்து பூப்போல் தண்ணீர் விழுகிறது. இந்த அருவியின் பாறைகளில் அதிகளவு காட்டு தேனீக்கள் உண்டு. மிகவும் ஆபத்தான அருவியான இங்கு குளிக்க செல்பவர்கள் மெயினருவில் இருந்து சுமார் 5 கி.மீ. அடர்ந்து முரட்டு பாதை வழியாக செல்ல வேண்டும். இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் இங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  • செண்பகாதேவி அருவி

மெயினருவியில் இருந்து இரண்டை கி.மீ. தொலையில் காட்டுப்பகுதியில் இந்த அருவி உள்ளது. தேனருவியில் இருந்து சுமார் இரண்டை கி.மீ. தூரம் ஓடி வந்து 30 அடி உயரத்தில் இருந்து அருவியாக கொட்டுகிறது. இங்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் அங்கு அமைந்துள்ள செண்பகாதேவி அம்மனை வழிபட்டு செல்லலாம். இந்த கோயிலில் குறிப்பிட்ட சில தினத்தன்று மஞ்சள் மழை பெய்யும். கடந்த 93ம் ஆண்டு அருவிப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அருவியின் முன்பகுதியில் இருந்த பகுதி பாறைகளால் மூடப்பட்டது. இங்குள்ள தடாகத்தில் ஆபத்து அதிகம் என்பதால் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக குளிப்பது அவசியம்.

  • மெயின்அருவி

இந்த அருவி செண்பகாதேவி அருவியில் இருந்து கீழே இரண்டரை கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழும் தண்ணீர் பொங்;கி பரந்து விரிந்து கீழே விழுகிறது. குற்றாலம் பேருந்து நிலையத்தின் மிக அருகிலேயே அமைந்துள்ள அருவி என்பதால் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இங்குள்ள குற்றாலநாதர் சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது என்பதால் அருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் சுவாமியை தரிசிப்பதை தவிர்ப்பது இல்லை.

  • ஐந்தருவி

குற்றாலம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஐந்தருவி. சுமார் 40 அடி உயரத்தில் இருந்து 5 கிளைகளாக பரந்து விரிந்து தண்ணீர் கொட்டும். 2 கிளைகளில் பெண்களும், 3 பிரிவுகளில் ஆண்களும் குளிக்கலாம். ஓரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குளித்து மகிழலாம் என்பதால் இந்த அருவிகளில் குளிக்க அனைத்து தரப்பினரும் விரும்புவர். இந்த அருவிக்கரையில் சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளதால் பக்தர்களுக்கும் விருப்பமாக அருவியாக இது விளங்குகிறது.

  • பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. அருவி)

ஐந்தருவிக்கு மேலே சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி. இங்கு முக்கிய பிரமுகர்கள் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படுவர். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் இந்த அருவிகளை சுற்றுலா பயணிகள் அவ்வளவாக விரும்புவது இல்லை.

  • புலிஅருவி

குற்றாலம் பேருந்து நிலையத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் வழியில் சமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புலியருவி. இந்த அருவிக்கு பாசுபதசாஸ்தா அருவி என்ற பெயரும் உண்டு. 3 பிரிவுகளாக குறைந்த அளவு உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவதால் குழந்தைகள் இங்கு குளிக்க மிகுந்த ஆசைப்படுவர். இதனால் குழந்தைகளுடன் சுற்றுலா வருபவர்கள் அதிகளவு இந்த அருவியையே முற்றுகையிடுவர்.

  • பழையகுற்றாலம் அருவி

குற்றாலத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த அருவி அழகனாறு என்ற நதியில் இருந்து உற்பத்தியாகிறது. சுமார் 100 அடி உயரத்தில் படந்;து தண்ணீர் கொட்டுகிறது. இங்கு குளிப்பதை சுற்றுலா பயணிகள் அதிகளவு விரும்புவதற்கு காரணம் அமைதியான சூழலில் அமைந்துள்ள அருவியாகும்.

  • பாலருவி

தேனருவிக்கு மேலே சிறிது தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி. இங்கு அருவி பால் போல பொங்கி வருவதால் பால் அருவி என்று பெயர் வந்தது. இந்த அருவிக்கு செல்லும் பாதை மிகவும் அபாயகரமானதாகும். இதனால் சுற்றுலா பயணிகள் இங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்து.

உற்சாகமூட்டும் படகுசவாரி

குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முக்கியமான பொழுது போக்கு அம்சமாக விளங்குவது படகுசவாரி ஆகும். ஐந்தருவிக்கு செல்லும் வழியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வெண்ணமடை குளத்தில் அமைந்துள்ள படகுகுழாமில் படகுசவாரி செய்து பொழுதைகழிப்பார்கள். ஆண்டு தோறும் சீசன் தொடங்கி சில நாட்களுக்கு பிறகு தான் படகுகுழாமில் தண்ணீர் நிரம்பும். அதன்பிறகே அங்கு படகுசவாரி துவங்கும். ஆனால் இந்தாண்டோ சீசன் தொடங்கி 4 நாட்களுக்குள் படகுகுழாமில் தண்ணீர் நிரம்பி வழிவதால் படகுசவாரியும் விரைவாகவே துவங்கி விட்டது. இங்கு மொத்தம் 33 படகுகள் உள்ளன. 2 இருக்கை படகுகள் 12ம்,4 இருக்கை படகுகள் 12ம், இழுவை படகுகள் 5ம், தனிநபர் படகுகள் 4ம் உள்ளன. இதில் அரை மணி நேரத்திற்கு 4 இருக்கை படகுகளுக்கு ரூ.100ம், 2 இருக்கை படகுகளுக்கு 75ம், இழுவை படகுகளுக்கு 120ம், தனிநபர் படகிற்கு ரூ.50ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. படகுசவாரிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக பாதுகாப்பு கவசம் அணிந்து செல்ல வேண்டும். இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

பூங்காக்கள்-நீச்சல் குளங்கள்

குற்றாலம் பேருந்து நி;லையத்தின் மேல்பகுதியில் அழகான பூங்கா அமைந்துள்ளது. அருவிகளில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு தவறாமல் வந்து செல்பவர். தாங்கள் கொண்டு வந்த உணவை அருந்தி, சிறிது நேரம் ஓய்வு எடுத்து செல்வர். அத்துடன் குழந்தைகள் விளையாட ப+ங்காவில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் உள்ளதால் பொழுது போக்கு அம்சமாக இந்த பூங்கா விளங்குகிறது. அறை எடுத்து தங்க முடியாதவர்கள் இந்த பூங்காவிலேயே ஓய்வு எடுத்து செல்கின்றனர். இந்த பூங்காவிற்கு மேல் பகுதியில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நீந்தி விளையாட நீச்சல் குளம் அமைந்துள்ளது. இங்கு செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆயில் மஜாஜ்

குற்றாலத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்வதற்கு முன்பு ஆயில் மஜாஜ் செய்வது வழக்கம். குற்றாலம் என்றால் அருவிகள் எவ்வளவு பிரசித்தி பெற்றதோ அதே போல் ஆயில் மஜாஜ்சும் பிரபலமாகும். குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைகுற்றாலம் அருவி கரைகளில் ஏராளமான மசாஜ் ந்pலையங்கள் உள்ளன. மசாஜ் வகைகளுக்கு தக்கவாறு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பஸ்கள்

குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக தென்காசியில் இருந்து குற்றாலம், ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தென்காசி கிளையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் தென்காசியில் இருந்து குற்றாலத்திற்கு 5 ரூபாயும், குற்றாலத்தில் இருந்து பழையகுற்றாலத்திற்கு 7 ரூபாயும், ஐந்தருவிக்கு 5ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. சீசன் களைகட்டியுள்ள நிலையில் தற்போது 7 பஸ்கள் வரை இயக்கப்படுகிறது. இது தவிர நெல்லை, மதுரையில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சித்திரசபை

தமிழகத்தில் சிவபெருமான் நடனமாடிய 5 சபைகள் உள்ளன. அவற்றில் ஒன்று குற்றாலநாதர் கோயில் உள்ள சித்திரசபை ஆகும். இந்த சபையில் மூலிகைகளின் சாறு கொண்டு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அரங்கமும் இப்போதும் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிசேகம் நடத்தப்பட்டுள்ளது.

விடுதிகள்

குற்றாலம் சீசனுக்கு வரும் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வசதிகளுக்காக பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் சார்பிலும் நூற்றுக்கணக்கான விடுதிகள், லாட்ஜ்கள் உள்ளன. இவைகளின் தரத்திற்கு ஏற்ப வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட விடுதிகளை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக ரூ.880 வரையிலும், குறைந்த பட்சமாக 150 வரையும் ஒரு நாளுக்கு வாடகை வசூல் செய்யப்படுகிறது.



- குற்றாலம் குறித்த முழு தகவல்களையும் எழுதியவர் எனது சகோதரர் கணேஷ்குமார்.

Tuesday 11 June 2013

விபத்து அனுபவம்! மகிழ்ச்சியை மனதில் கொண்டு துக்கத்தை கடக்க வேண்டியிருக்கிறது!!

எங்கேயும் எப்போதும் படத்தைப்போல் ஒரு விபத்தை ஐந்தாண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன்…. விபத்து என்பது கேள்விப்படுபவர்களுக்கு ஒரு செய்தி.. ஆனால் சந்திப்பவர்களுக்கு?

நாகர்கோயிலில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ரதிமீனா பேருந்து இரவு 11.30 மணிக்கு திருமங்கலம் அருகே விபத்துக்கு உள்ளானது. இடி, மின்னலுடன் கடும் மழை பெய்து கொண்டிருந்த நேரம் அது.. அந்த மழையிலும் அதிவேகத்தில் பேருந்து வந்தது தான் விபத்திற்கு காரணம்.. ஒரு திருப்பத்தில் தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து பலமுறை உருண்டது…

விபத்து நடந்த சில நிமிடங்களுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை.. கவிழ்ந்து கிடந்த பஸ், பின்னால் வந்த லாரி டிரைவர்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்தவர்களை மீட்பது எல்லாம் புரிய சில நிமிடங்கள் ஆனது.. ஏதோ ஒரு இருக்கைக்கு கீழே அரை மயக்கத்தில் கிடந்த என்னை, யாரோ பிடித்து தூக்க, ஏதோ ஒரு கம்பியில் மாட்டியிருந்த என் இடது கையில் சதை கொஞ்சம் கம்பியிலேயே தொங்கியது…

சரிந்து கிடந்த பேருந்தில் மேல் பக்கத்தில் என்னை படுக்க வைத்தவர், உள்ளே இருந்தவர்களை மீட்க மறுபடியும் பேருந்துக்குள் சென்றார். கீழே இருந்தவர்கள் குதிம்மா, குதிம்மா என்று கத்த, அப்படியே தொம்மென்று குதித்து விழுந்தேன். காலில் செருப்பு எதுவும் இருக்கவில்லை.. கீழே கிடந்த கண்ணாடிச் சிதறல்கள் அப்படியே காலிலும் உடம்பிலும் குத்தியது.

என்னைத் தூக்கி விட்டவர்களை தவிர்த்து விட்டு, ஓரமாக தரையில் அமர்ந்து எங்கெல்லாம் அடிபட்டிருக்கிறது என பார்த்தேன்.. இடது கையையும், வலது காலையும் அசைக்கவே முடியவில்லை. தலை வலித்த வலியில் உயிர் போய்விடும் போய் இருந்தது. போட்டிருந்த ஆடை முழுவதும் இரத்தம்… எங்கெங்கு இருந்தோ இரத்தம் வழிந்து கொண்டிருந்தது… கொஞ்ச நேரத்தில் செத்துப் போகப் போகிறேன் எனத் தோன்றியது.

யாரிடமாவது ஃபோன் இருக்கிறதா எனக் கேட்க, ஒரு லாரி டிரைவர் போனை கொண்டு வந்து கொடுத்தார்.. அந்த இடத்தில் சிக்னல் வேறு கிடைக்கவில்லை.. அங்கு யாரிடம் எல்லாம் ஃபோன் இருந்ததோ, எல்லாவற்றையும் அவர் வாங்கி என்னிடம் கொடுத்தார்… சிக்னல் கிடைத்த ஃபோனில் இருந்து ஆம்புலன்ஸுக்கும், போலீஸுக்கும் நான் தான் தகவல் கொடுத்தேன்..  நாகர்கோயிலில் அப்பாவின் நண்பருக்கும் தகவல் சொல்லி விட்டு, வீட்டில் சொல்ல வேண்டாம், நீங்கள் மட்டும் கிளம்பி வர முடியுமா எனவும் கேட்டேன்.. அவர் உடனே கிளம்புவதாக சொன்னார்.. ஆனால் வீட்டில் சொல்லி விட்டார்.

மிக சோதனையான காலகட்டங்களில், நம்பிக்கையும், தைரியமும் சடாரென வந்து விடுவதை அந்த நேரத்தில் அனுபவப் பூர்வமாக உணர்ந்தேன். பின்னால் வந்த வாகனங்களில் இருந்தவர்கள் பேருந்தில் இருப்பவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். என் வலப் பக்கத்தில் ஒரு இளைஞன் தரையில் புரண்டு சத்தமாக அழுவதை கவனித்தேன்.. அங்கிருந்த அழுகைச் சத்தத்தை மீறி அவன் சத்தம் கேட்டது.. மெதுவாக நகர்ந்து (கிட்டத்தட்ட தவழ்ந்து) அவன் அருகில் சென்றேன்.. அவனது இடது கை, கொஞ்சம் தள்ளி தனியாக கிடந்தது.. தோளில் இருந்து இரத்தம் ஓடிக் கொண்டே இருந்தது.

’’எங்கப்பா போன மாசம் தான் செத்துப் போனார்.. என்னை நம்பி அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாம் இருக்காங்க.. நான் உயிரோட இருக்கணும்’’ என்று சத்தமாக கதறினான். அவன் துயரம் சகிக்க முடியாததாக இருந்தது.. ‘’ஒண்ணும் ஆகாது உங்களுக்கு. தைரியமா இருங்க’’ என்று அவன் தலையை எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டேன்.. ‘’அய்யோ சிஸ்டர், நான் உயிரோட இல்லைன்னா, எங்க வீட்டில் எல்லாரும் செத்துப் போயிடுவாங்க சிஸ்டர்’’ அவன் என் மடியில் புரண்டு கதறிக் கொண்டிருந்தான். எனக்கு தலை கிறுகிறுத்து மயக்கம் வரும்போல் இருந்தது.

சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் வர, நாங்கள் அதில் ஏற்றப்பட்டோம். அந்த இளைஞனும், நானும் ஒரு ஆம்புலன்ஸில் இரு சீட்களிலும் படுக்க வைக்கப்பட, இடையில் கீழே இருவர் படுத்தபடியும், ஒருவர் உட்கார்ந்தபடியும் அந்த ஆம்புலன்ஸ் கிளம்பியது. என்னை யாரோ தூக்கியபோது, நான் அந்த இளைஞனின் துண்டிக்கப்பட்ட கையை எடுத்து என்னருகில் வைத்துக்கொண்டேன்.. இப்போது நினைத்தாலும் உடல்  முழுவதும் சிலிர்க்கிறது…

மதுரை மருத்துவமனைக்கு போவதற்குள் ஆம்புலன்ஸில் இருந்த ஒரு அம்மா இறந்து போனார். உடன் உட்கார்ந்து வந்தவர் அவரது மகன் என்பது அப்போதுதான் தெரிந்தது. எனக்கு நானும் செத்துப் போகப் போகிறேன் என மீண்டும் தோன்றியது. மதுரை செண்பகம் மருத்துவமனைக்கு நாங்கள் சென்றபோது ஒரு மணி இருக்கும் என நினைக்கிறேன்.. டாக்டர்களே அங்கு இல்லை.. அந்த கை துண்டிக்கப்பட்ட இளைஞன் ’’எனக்கு வலிக்கு எதாவது மருந்து கொடுங்க, இல்லை கொன்னுடுங்க’’ என கதறிக் கொண்டே இருந்தான்.

எனக்கு முதல் உதவி அளித்த நர்ஸிடம், நான் அவனுக்கு வலிக்கு மருந்து கொடுக்கும்படி கேட்க, அந்த நர்ஸ் வள்ளென்று விழுந்தார். அருகில் இருந்த வேறொரு நர்ஸிடம், ‘’நான் செத்துடுவேனா” என்று கேட்க, அவர் முகத்தில் ஒரு சலனமும் இல்லை.. சில நிமிடங்களில் நினைவு தவறிப் போனது.. விபத்து நடந்து சிகிச்சை ஆரம்பிக்கவே, குறைந்தது மூன்று மணிநேரம் ஆகியிருக்கும் என நினைக்கிறேன். தனியார் மருத்துவமனைகளிலேயே இந்த கதி என்றால் அரசு மருத்துவமனைகளில்?

எனக்கு நினைவு திரும்பும்போது மறுநாள் இரவாகி இருந்தது.. விழித்தபோது என் குடும்பமும், சில நண்பர்களும் என்னோடு இருந்தார்கள்.. இடது கையிலும், வலது காலிலும் பல இடங்களில் எலும்பு முறிவுகள் இருந்தன. தலையில் அடிபட்டு இரத்தம் உறைந்து போயிருந்தது. அதன்பின் அங்கிருந்து நாகர்கோயில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றேன்..ஓரளவு இயல்பு நிலைக்கு வரவே, ஒருமாதம் ஆனது.

விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் என் ஜன்னலோர இருக்கையை பக்கத்து இருக்கை பெண்ணிற்கு மாற்றிக் கொடுத்திருந்தேன்… திருநெல்வேலியில் ஏறிய அவள் அண்ணா பல்கலையில் படித்துக் கொண்டிருந்தாள். ஏறியதில் இருந்தே வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்த அவள், கயத்தாறு வரும்போது கொண்டு வந்திருந்த உணவை பகிர்ந்து சாப்பிடும் அளவுக்கு நெருக்கமாகிப் போனாள்… ஜன்னலோர இருக்கையை என்னிடம் விரும்பி வாங்கிக் கொண்டாள்.. பதிமூன்று பேர் இறந்து போன அந்த விபத்தில் அந்தப் பெண்ணும் இறந்து போனாள்….இதை எழுதும் இந்நிமிடம் அந்தப் பெண்ணின் பெயர் நினைவில் கூட இல்லை.. ஆனால் அந்த முகத்தையும், அவளது பேச்சையும் இன்றுவரை ஒருநாள் கூட நினைக்க மறந்தது இல்லை.

இடது கை துண்டிக்கப்பட்ட அந்த இளைஞன் எப்படி இருக்கிறான் என அறியும் ஆவல் இருந்தது.. அவன் இறந்திருப்பானோ என்கிற பதட்டமும் இருந்தது. மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில் என அலைந்து ஒருவழியாக கண்டுபிடித்தேன்.. அம்மாவையும் அழைத்துக் கொண்டு அவனைப் பார்க்கப் போன முதல்நாள் இன்னமும் அப்படியே நினைவில் இருக்கிறது. என்னைப் பார்த்ததும், அவனுக்கு சந்தோஷத்தில் அழுகை வந்தது. அவனது உறவினர்களிடம் ‘’என்னைக் காப்பாத்தினவங்க” என்று அறிமுகப்படுத்தினான்.. அவனது பெயர் நவீன் என்பதையும் தெரிந்து கொண்டேன். துண்டிக்கப்பட்ட கையை மறுபடியும் வைக்க முடியவில்லை.

ஓட்டுநரின் அஜாக்கிரதையால் நடந்த அந்த விபத்தில் ஓட்டுநருக்கு எதுவும் ஆகவில்லை. அந்த பஸ் நிறுவனத்திற்கும் ஒரு நஷ்டமும் இல்லை. நானும், நவீனும் ரதிமீனா டிராவல்ஸ் மீது வழக்குத் தொடர்ந்து, ஒரு கட்டத்தில் சலித்துப் போய் நிறுத்திக் கொண்டோம். பணம் கொடுத்து, எல்லாவற்றையும் அவர்கள் சரிக்கட்டிக் கொள்கிறார்கள்.

அந்த பேருந்தில் பயணம் செய்த எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒருவகையில் அந்த விபத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. எங்கள் வலது பக்கத்தில் துறுதுறுவென விளையாடிக் கொண்டு வந்த அந்தக் குட்டிக் குழந்தை என்னவானது என்றே தெரியவில்லை. எதாவது ஆகியிருக்குமோ என்கிற பயத்திலேயே அதுபற்றி விசாரிக்கவில்லை.

அதன்பின் இன்றுவரை பேருந்து பயணம் என்பது எனக்கு மரண அவஸ்தை தான்.. தவிர்க்க முடியாத நேரங்களில் தனியாக பயணம் செய்ய நேர்ந்தால் இரவு முழுக்க எந்த நிமிடமும் விபத்து நடக்கலாம் என்கிற பயத்தில் நடுங்கியபடி விழித்திருப்பேன்.. பலநாட்கள் அழுதபடியும் தனியாக பயணம் செய்திருக்கிறேன்.. அந்த விபத்தில் தலையில் அடிபட்டதால், என்னுடைய நுகரும் திறனை (Smelling sense) இழந்தேன்…..

எல்லா துக்கத்திலும் மகிழ்ச்சி ஒளிந்திருக்கும் என்பதும் என் வாழ்க்கையில் நூறு சதவீதம் உண்மையான வாக்கியம்.. அன்று அறிமுகமான நவீன் இன்றுவரை எனக்கு நல்ல நண்பன்.. அவன் அம்மா, அவன் தங்கை, கடந்த வருடம் அவன் திருமணம் செய்து கொண்ட அவன் மனைவி எல்லோரும் எனக்கு இப்போதுவரை மிக நெருக்கமான நண்பர்கள் தான். அந்த மகிழ்ச்சியை மட்டும் மனதில் கொண்டு தான், அந்த துக்கத்தை கடக்க வேண்டியிருக்கிறது.

இந்த விபத்து அனுபவம் என்னுடைய அனுபவம் இல்லை... என் தோழி ஒருவரின் அனுபவம். படிக்கும்போது என் கண்கள் குளமாகின. உருக்கமான இந்த பதிவை இங்கு வெளியிடுவதற்கு காரணம், கடைசியில் வரும் வரிகளுக்காகத்தான்.

ஆம்! மகிழ்ச்சியை மனதில் கொண்டு தான், அந்த துக்கத்தை கடக்க வேண்டியிருக்கிறதுஞ்!!

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை : இராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது.அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன்.அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான்.ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான்.அங்கு இருந்த ஒரு துறவி,''அய்யா,நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?''என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார்,''அய்யா,உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது.கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது.இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது.அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்?அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை.பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை.இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை.ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம்.நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.

-இராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை-

படித்ததில் பிடித்தது

ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது.

அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தர்ரியா என்று கேட்டான்.குட்டி பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.


அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான்.குட்டி பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள்.

அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக உறங்கினாள்.அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை.அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் தந்திருப்பாளா இல்லை நாம் ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி இருப்பாளா என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் அவஸ்த்தைப்பட்டான்.

நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.

இது காதலுக்கும் ,நட்புக்கும்,வேலை செய்யும் இடத்தில் இருக்கும் முதலாளி தொழிலாளி உறவுக்கும் பொருந்தும்.

எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத அன்பை காட்டுங்கள்....!!!!


- FACEBOOK

Monday 10 June 2013

முதல் பதிவு

வணக்கம் வலையுலக நண்பர்களே....

சமுத்ரா என்ற பெயரில் மக்கள் தொடர்பு நிறுவனம் நடத்தி வரும் நான், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் பணியாற்றிள்ளேன். இது எனது முதல் பதிவு அல்ல... ஏற்கனவே பல வலைப்பூக்களை தொடங்கி, எழுத்துக்களால் வளர்த்து பல்லாயிரக்கணக்கான பதிவுகளை வலையேற்றி, பல நூறு நண்பர்களின் ஆதரவைப் பெற்று... சிலபல வேலைப்பளுக்களால் தொடர்ந்து எழுதாமல் வலைப்பூக்களை வாட விட்டு விட்டேன்.

இப்போது மீண்டும் வந்திருக்கிறேன். எனது அனுபவங்கள், செய்திகள், நாட்டு நடப்புகள், நல்லது, கெட்டதுகளை இந்த தளத்தில் பகிர்ந்து கொள்கிறேன்... எனது எழுத்துக்களை வலையுலகம் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன்...!

நன்றி!

எஸ்.செந்தில்குமார்